தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை – சபாநாயகர் கரு ஜயசூரிய
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்டதாக , சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான மகிந்த ராஜசபக்சவின் தகைமை தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து யாரேனும் விரும்பினால் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர் இதன் போது தெரிவித்துள்ளார்.
அப்போது, இந்த விவகாரத்தை சபாநாயகரே தீர்க்க முடியும் என்றும், அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும் மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் சுட்டிக்காட்டினர்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சி ஒன்றுக்கு தாவி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என்றும், இது தொடர்பாக தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறும், சபாநாயகரிடம் மனோ கணேசனும் ஹக்கீமும் கோரியிருந்தனர்.
எனினும், சபாநாயகர் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார் என்றும் தெரியவருகிறது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S