பல்கலைக்கழகம் தொடர்பில் புதிய நடைமுறை
பல்கலைக்கழகங்கள் தொடர்பிலான புதிய அறிக்கை ஒன்றை தயாரிப்பதாக கோப் குழு தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
சிரச எப்.எம். வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கான நிதி, வௌிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில், பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள், மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட காரணிகள் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுவான பிரச்சினைகளே காணப்படுவதாகவும் கோப் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழு அறிக்கையில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
கோப் குழுவின் அறிக்கை கடந்த மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்து அமைச்சர்கள் தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.